மத்திய தொல்லியல்துறை பட்டயபடிப்புக்கான தகுதி தேர்வில் செம்மொழியான தமிழ் மொழிக்கு அனுமதி..!

டெல்லி : மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி வழங்கி மத்திய தொல்லியல்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழ், கன்னடம், மலையாளம், ஒடிஷா உள்ளிட்ட 10 மொழிகளுக்கு அனுமதி வழங்கி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான குறிப்பு ஆணையை வெளியிட்டு, முதுகலைப் பட்டம் பெற்று இருப்போர் விண்ணப்பிக்கலாம் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் செய்துள்ளது.

தொல்லியல்துறை, மானிடவியல் மற்றும் செம்மொழிகளான சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு குறிப்பிட்டு இருக்கின்றது.ஆனால் மத்திய அரசின் தொல்லியல் துறையின் முதுகலைப் பட்டப் படிப்புக்கான கல்வித் தகுதியில் உயர்தனிச் செம்மொழியான தமிழ் இடம்பெறவில்லை. செம்மொழியான தமிழ் மொழி புறக்கணிப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தொல்லியல் படிப்பில் தமிழ் புறக்கப்பணிக்கப்பட்டதை எதிர்த்து நேற்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொல்லியல் படிப்பில் தமிழ் மொழி புறக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அழகுமணி முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் இன்று அவசரமாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.  

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செம்மொழியான தமிழை மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் செம்மொழியான தமிழ் மொழியை அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களும் செம்மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து செம்மொழியான தமிழ் உள்பட 10 மொழிகளுக்கு தொல்லியல்துறை பட்டயபடிப்பில் அனுமதி வழங்கி புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories: