சிவகிரி: சிவகிரியில் சேதமடைந்த விஸ்வநாதப்பேரி பெரியகுளம் கண்மாயை சொந்த செலவில் சீரமைக்கும் பணியில் பாசன விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரியில் விஸ்வநாதப்பேரி பெரியகுளம் 376 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதன்வாயிலாக 1110 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இக்குளத்தில் இருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லும் கண்மாய் சின்னமடை மேட்டுப் பகுதியில் முறையான பராமரிப்பின்றி பழுதானது. இதனால் விளைநிலத்திற்கு போதிய அளவு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதோடு கண்மாய் பகுதியில் அமைந்த தொட்டியும் உடைந்து சேதமடைந்தது. மேலும் பல்வேறு மடைகளும் பாழாகின. இவற்றைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.