கருந்துளை, விண்மீன் திரள் பற்றிய ஆய்வுக்காக 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: இந்தாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆன்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. கருந்துளை பற்றிய ஆய்வுக்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. கருந்துளை உருவாக்கம் குறித்த பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவான கணிப்பை கண்டறிந்ததற்காக ரோஜர் பென்ரோசுக்கும், விண்மீன் திரள்களின் நடுப்பகுதியில் தூசு படிந்த வித்தியாசமான பொருளை கண்டறிந்ததற்காக ரெயின்ஹார்டு கென்செல், ஆன்ட்ரியா கெசுக்கும் விருது வழங்கப்படுகிறது. இந்த கருந்துளை சாதாரண கருந்துளை அல்ல. சூரியனை விட 40 லட்சம் மடங்கு மிகப் பெரியதாகும். இதன் மூலம் விண்மீன் திரள்கள் அனைத்தும் மிகப் பெரிய கருந்துளைகளை கொண்டிருக்கும் என்பது விஞ்ஞானிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று வேதியியல் துறைக்கும், நாளை இலக்கியத்திற்கும், நாளை மறுநாள் அமைதிக்கும், 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Related Stories: