செம்மரம் வெட்டிய கூலி வழங்குவதில் தகராறு பெண் கொலையில் ராணுவ வீரரை போலீசாரிடம் ஒப்படைத்த அதிகாரிகள்: காஷ்மீரில் இருந்து அழைத்து வரப்பட்டார்

ஆலங்காயம்: திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிழக்கத்திவட்டம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(28). இவர் கடந்த 2019 நவம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த 7 பேரை ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்ட அழைத்து சென்று, அவர்களுக்கு கூலி வழங்கவில்லையாம். இதனால், கடந்த டிசம்பர் 3ம் தேதி செம்மரம் வெட்ட சென்றவர்களுக்கும், சீனிவாசனுக்கும் கூலி வழங்குவது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. அப்போது தடுக்க வந்த சீனிவாசனின் மனைவி சாந்திபிரியா(25), தாய் மல்லிகா(45) ஆகியோர் தாக்கப்பட்டனர். இதில் மயங்கி விழுந்த சாந்திபிரியா உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் கொலை வழக்குப்பதிந்து பூங்குளம் பகுதியை சேர்ந்த இளையராஜா, பழனி, கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன் உட்பட பலரை கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த இளையகுமார்(32) என்ற ராணுவ வீரரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இளையகுமார் காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமிற்கு சென்று பணியாற்றுவது தெரியவந்தது. இந்த வழக்கு குறித்து ஆலங்காயம் போலீசார் காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமிற்கு கடிதம் அனுப்பினர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட ராணுவ அதிகாரிகள், இளையகுமாரை காஷ்மீரிலிருந்து சென்னை ராணுவ முகாமிற்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, சென்னையிலிருந்து இளையகுமாரை அவில்தார் சங்கர் தலைமையிலான ராணுவ அதிகாரிகள் நேற்று ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இன்ஸ்பெக்டர் நாகராஜிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.

Related Stories: