இந்தியன் வங்கி ஏடிஎம் ரசீதில் ஆங்கிலம், இந்தியில் பதிவுகள்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

உளுந்தூர்பேட்டை: இந்தியன் வங்கி ஏடிஎம் ரசீதில் ஆங்கிலம், இந்தி மொழியில் பதிவுகள் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தில் உள்ள பிரபல வங்கியில் திருநாவலூர், கெடிலம், ஈஸ்வரகண்டநல்லூர், சேந்தமங்கலம், மணலூர், கிழக்குமருதூர் மற்றும் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கியின் ஏடிஎம் சென்டரில் இருந்து நேற்று வந்த ரசீதில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் பதிவுகள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘இந்த வங்கியின் வாடிக்கையாளர்களாக கிராமப்புற ஏழை எளிய விவசாயிகள், பொதுமக்கள் தான் உள்ளனர். இந்த வங்கி ஏடிஎம்மில் கடந்த இரண்டு நாட்களாக எந்த மொழியை தேர்வு செய்தாலும் வரும் ரசீதுகளில் தமிழ் இல்லை. ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் அனைத்து பதிவுகளும் வந்துள்ளது’ என்றனர்.

Related Stories: