புதுச்சேரி,: உ.பி.யில் ராகுல்காந்தி மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து புதுச்சேரியில் சுதேசி மில் அருகே காங்கிரஸ் சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:மத்திய பாஜக மோடி ஆட்சியில் ஒவ்வொரு நாளும் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. உத்தரபிரதேசத்தில் தலித் இளம்பெண் 4 பேர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை மூடி மறைக்கும் முயற்சியை அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கொண்டுள்ளார். இச்சம்பவத்துக்கு அவர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.