புதுடெல்லி: 64 ஆண்டுகள் பழமையான இந்திய மருத்துவ கவுன்சில் இன்றுடன் கலைக்கப்படுகிறது; தேசிய மருத்துவ ஆணையம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. மருத்துவத் துறையில் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வரும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கடந்தாண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி 64 ஆண்டுகளாக செயல்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மருத்துவ அமைப்புகள், மருத்துவ மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணையத்தின் முதல் தலைவராக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் சுரேஷ் சந்திர ஷர்மா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்றுடன் இந்த கவுன்சில் கலைக்கப்படுகிறது. இதுவரை இந்த கவுன்சில் பார்த்து வந்த பணிகளை நான்கு வாரியங்களாக பிரித்து தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.