சென்னை: தொழில்நுட்ப பிரச்சனையால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல்-மே மாதம் நடைபெற வேண்டிய இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் கொரோனா ஊரடங்கினால் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மாணவர்கள் முதல் முறையாக ஆன்லைனில் தேர்வை சந்திப்பதால், அதற்கு முன்னோட்டமாக மாதிரி தேர்வு கடந்த 19, 20 மற்றும் 21ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.