ஜார்க்கண்டில் 12 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கார் பரிசு: மாநில கல்வியமைச்சர் ஜகர்நாத் வழங்கினார்.!!!

ராஞ்சி: ஜார்க்கண்டில் 12ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு மாநில அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ கார் பரிசாக வழங்கியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, கடந்த செப்டம்பர் 18-ம் தேதி பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வுகளில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என மாநில கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ தெரிவித்திருந்தார்.

இருப்பினும், தேர்வு முடிவுகள் வெளியான போது, முதலிடம் பிடித்த மாணவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வில் 457 மதிப்பெண்களுடன் அமித் குமார் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண்களுடன் மனிஷ் குமார் கடியார் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இதனையடுத்து, ராஞ்சியில் உள்ள மாநில சட்டசபை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ கார்களின் சாவியை மாணவர்கள் அமித் மற்றும் மனீஷிடம் ஒப்படைத்தார்.

 

இது குறித்து அமைச்சர் தெரிவிக்கையில், “நான் அளித்த வாக்குறுதி இன்று நிறைவேறியது. முதலிடங்களுக்கு கார்களைக் கொடுப்பதன் நோக்கம். நன்றாக படிக்கும் அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இதனை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், இருசக்கர வாகனங்களும் வழங்கி வருகிறார். 75% க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற 340 பேருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கியுள்ளார். அமைச்சரின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

12 ஆம் வகுப்பு முதலிடம் பிடித்த அமித் குமார், “நான் ஒருபோதும் நினைத்திராத பரிசில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கல்வி அமைச்சரின் செயல் பல மாணவர்களை ஊக்குவிக்கும் என்றார்.

10 ஆம் வகுப்பு முதலிடம் பிடித்த மனீஷும் இதே போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தினார். இது ஒரு தனித்துவமான உணர்வு, அதை என்னால் வார்த்தைகளில் வரையறுக்க முடியாது. இந்த பரிசு மேலதிக கல்விக்காக கடினமாக உழைக்க என்னை ஊக்குவிக்கும் என்றார்.

இந்த ஆண்டு, ஜார்கண்டில் 2,31,300 மாணவர்கள் 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதினர், அதில் 1,71,647 பேர் தேர்ச்சி பெற்றனர். இதேபோல், 3,85,144 மாணவர்கள் வகுப்பு -10 போர்டு தேர்வுகளை எழுதினர், அதில் 2,88,928 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

இதற்கிடையே, சிறப்பான குழந்தைகளை ஊக்குவிக்கும் முயற்சியில் ஜே.ஏ.சி, சி.பி.எஸ்.இ மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ (இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில்) வாரியங்களின் 10-ஆம் வகுப்பு மற்றும் 12 போர்டு தேர்வு முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ .1 லட்சம் பரிசு வழங்கும் திட்டத்திற்கு ஜார்க்கண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: