மஞ்சூர்: மஞ்சூர் அருகே வாகனங்களை வழி மறித்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூர்- கோவை சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதேபோல் கெத்தை அருகே முள்ளி பகுதியை ஒட்டியுள்ள கேரளா வனப்பகுதிகளில் இருந்தும் ஏராளமான காட்டு யானைகள் இடம் பெயர்ந்து தமிழக பகுதிகளில் ஊடுருவியுள்ளது. இந்த யானைகள் கெத்தை, முள்ளி, மானார், அத்திகடவு உள்ளிட்ட பகுதிகளில் நடமாடி வருவதுடன் சாலையில் ஆங்காங்கே நின்று அவ்வழியாக சென்று வரும் அரசு பஸ்கள், வாகனங்களை வழிமறித்து வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை கெத்தையில் இருந்து தனியார் வாகனத்தில் பயணிகள் மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். 23வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது 4 யானைகள் வழியை மறித்தபடி நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது.