‘கூட்டணியை விடுவோம்; கொள்கையை விட முடியாது’: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தடாலடி

திருவில்லிபுத்தூர்: கூட்டணியை விட்டுக்கொடுக்கலாம், கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வேளாண் திருத்த மசோதாவில் தவறு இருந்தால் கண்டிப்பாக முதல்வர் எதிர்ப்பார். இருமொழி கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு. கூட்டணி வேறு. கொள்கை வேறு. கூட்டணியை விட்டு கொடுக்கலாம். கொள்கையை விட்டு கொடுக்க முடியாது. கூட்டணி என்பது துண்டு போன்றது, கொள்கை என்பது வேஷ்டி  போன்றது’’ என்றார்.‘சசிகலா வெளியே வந்தால் அரசியல் மாற்றம் நிகழுமா’ என்ற கேள்விக்கு, ‘‘எது நடந்தாலும், எப்படி நடந்தாலும், எந்த சூழ்நிலை வந்தாலும் முதல்வரும், துணை முதல்வரும் முடிவு எடுப்பார்கள். அவர்கள் எடுக்கும் முடிவிற்கு அதிமுக  தொண்டர்கள் கட்டுப்படுவார்கள்’’ என்றார்.

Related Stories: