அனாதையாக நின்ற காரில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண்ணுக்கு வலை

ஆவடி: ஆவடி அருகே அனாதையாக நின்ற காரில் 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள பெண்ணை வலைவீசி தேடிவருகின்றனர். ஆவடி அடுத்த பாலவேடு ஏ.என்.எஸ் நகரில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று அனாதையாக வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது.  இதுகுறித்து, அப்பகுதி மக்கள் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  தகவலறிந்த எஸ்.ஐ மணிசேகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர், போலீசார் கார் கதவை திறந்து உள்ளே சோதனை செய்தனர். அப்போது, அங்கு ஒரு பிளாஸ்டிக் சாக்கு மூட்டை ஒன்று இருந்தது. அதில் பிளாஸ்டிக் கவரில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. பின்னர், போலீசார் பொட்டலங்களை எடை போட்டபோது 7 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்து முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் சென்னை, பாடிபுதுநகரை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான கார் என தெரியவந்தது. ஆனால், அவர் அந்த காரை கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏஜென்சி மூலம் திருத்தணியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு விற்று விட்டதாக கூறினார். இதனையடுத்து, போலீசார் தலைமறைவாக உள்ள அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

Related Stories: