வீட்டில் தனியாக இருந்தபோது கத்தரிக்கோலால் சரமாரி குத்தி கல்லூரி மாணவி படுகொலை: கொத்தனாருக்கு வலை

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பி.ஜி.அவென்யூ, 4வது தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் மீனா (20), கல்லூரி மாணவி. நேற்று வீட்டில் தனியாக இருந்தார்.  இந்நிலையில், வேலைக்கு சென்ற தனலட்சுமி மகள் மீனாவை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால், மீனா அழைப்பை எடுக்கவில்லை. இதனால், பக்கத்து வீட்டு பெண்ணை தொடர்புகொண்டனர். அந்த பெண் வந்து பார்த்தபோது, கழுத்தில் கத்தரிக்கோலால் சரமாரி குத்தப்பட்ட நிலையில் மீனா ரத்த வெள்ளத்தில்  இறந்து கிடந்தார். தகவலறிந்த பூந்தமல்லி போலீசார், மீனாவின் உடலை மீட்டு  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், மீனா வீட்டில் நேற்று கட்டுமான பணிக்கு வந்த கொத்தனார் ஒருவர், வேலைக்கு கூடுதலாக ஒருவரை அழைத்து வருவதாக கூறி சென்றார்.

ஆனால், திரும்பி வரவில்லை சந்தேகத்தின் பேரில் அவரது வீட்டு முகவரியை கண்டுபிடித்து போலீசார் சென்று பார்த்தபோது, அவரது வீடு பூட்டிக்கிடந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்தக்கரை படிந்த சட்டை மற்றும் ஒரு செல்போன் இருந்தது. அந்த செல்போனை எடுத்து வந்து மீனாவின் உறவினர்களிடம் காண்பித்தபோது, அது மீனாவின் செல்போன் தான் என உறுதி செய்தனர்.  வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் திரும்பி வந்து,  மீனாவிடம் நகையை பறிக்க முயன்றார். மீனா கூச்சல் போட முயன்றதால், அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே மீனா உயிரிழந்தார்.  பின்னர் மீனாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை மற்றும் செல்போனை கொத்தனார் எடுத்துச் சென்றது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அந்த கொத்தனாரை தேடி வருகின்றனர்.

Related Stories: