தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு மருத்துவ பரிசோதனை: தனியார் மருத்துவமனையில் நடந்தது

சென்னை: தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், கோயம்பேடு மார்க்கெட்டை திறப்பது தொடர்பாக சில நாட்களுக்கு முன் நேரில் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடர் நிகழ்வுகளில் கலந்து கொண்டார். மேலும், கடந்த 18ம் தேதி அதிமுக உயர்நிலை குழு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பல்வேறு கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்ற காரணத்தாலும் ஏற்கெனவே இதய நோய் தொடர்பாக சிகிச்சை எடுத்து கொண்டதாலும் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்தார். இதற்காக நேற்று காலை 7 மணியளவில் சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த பரிசோதனை நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை 8.15 மணியளவில் ஓ.பன்னீர் செல்வம் வீடு திரும்பினார்.

Related Stories: