15 ஆண்டுகளாக சீரமைக்காததால் சேறும் சகதியுமாக மாறிய கிராம சாலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திருப்பாச்சூர் பெரிய காலனி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தில் 15 ஆண்டு காலமாக சாலைகள் சீரமைக்கப்படாததால் ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலைகளில் நடக்கவே முடியாத நிலை உள்ளது. சிமெண்ட் சாலை தற்போது மண் சாலையாக இருப்பதால் சேறும், சகதியுமாகவும் உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

மேலும், மழைநீர் சாலையில் தேங்கி உள்ளதால் கொசுக்கள் அதிகரித்து கிராம மக்களுக்கு டெங்கு, மலேரியா, போன்ற வைரஸ் காய்ச்சல் ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. மழைநீர் வெளியேர கால்வாய் இல்லை. இதனால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த சாலையை சீரமைக்ககோரி இந்த தெருவை சேர்ந்த குடியிருப்புவாசிகள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அப்பகுதியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: