மதுரையில் மாணவர் மர்ம மரணம்; 2 எஸ்ஐக்கள் சஸ்பெண்ட்: மக்கள் 2வது நாளாக போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக பொதுமக்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் 2 எஸ்ஐக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு பகுதியில் வசித்த கன்னியப்பன் மகன் ரமேஷ்(17). பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். இவரது அண்ணன் ஒரு பெண்ணை காதலித்து அவருடன் தலைமறைவான வழக்கில், ரமேஷை சாப்டூர் போலீசார் கடந்த 16ம் தேதி விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் 17ம் தேதி பெருமாள்குட்டம்பாறை உச்சியிலுள்ள மரத்தில் அவர் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டார்.

பொதுமக்கள் போராட்டத்தையடுத்து எஸ்ஐக்கள் ஜெயக்கண்ணன், பரமசிவம் உள்பட 4 பேர் மீது சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று 2வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து சாப்டூர் எஸ்ஐக்கள் ஜெயக்கண்ணன், பரமசிவம் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட புறநகர் எஸ்பி சுஜித்குமார் நேற்று அதிரடியாக பிறப்பித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: