சேலம் அருகே பயங்கரம் ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை?: போலீசார் தீவிர விசாரணை

சேலம்: சேலம் அருகே ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் பலாத்காரம்  செய்து கொலை  செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்து வருகிறது.சேலம் மாவட்டம் மல்லூர் ஆராங்கல்திட்டை சேர்ந்தவர் அய்யண்ணன். இவரது மனைவி லட்சுமி (60). இவர் 30 ஆண்டாக கணவனை பிரிந்து வந்து, ஆராங்கல்திட்டில் தனியாக வசித்து வந்தார்.  ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வந்தார்.  இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஆராங்கல்திட்டு அருகேயுள்ள கல்லாங்குத்து என்ற கரட்டுக்கு லட்சுமி ஆடு மேய்க்க சென்றார். ஆனால் நேற்றிரவு நீண்ட நேரமாகியும் லட்சுமி வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், லட்சுமியை தேடி கல்லாங்குத்து கரட்டில் சென்றனர். அங்கு லட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அங்குள்ளவர்கள் மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து போலீசார் லட்சுமியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆடைகள் அலங்கோலமாக கிடந்ததால் லட்சுமி பலாத்காரம் செய்து கொலை  செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  லட்சுமி செல்போன் ஒன்று வைத்து இருந்தார். அந்த செல்போனை காணவில்லை. அதனை பறிக்கும் முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.  செல்போன் கிடைத்தால் கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: