திருவில்லிபுத்தூரில் உள்ள தென் திருப்பதியில் நாளை பிரம்மோற்சவ கருடசேவை-ஆன்லைனில் டிக்கெட் வசதி ஏற்பாடு

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் `தென் திருப்பதி’ என்றழைக்கப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், மலை உச்சியில் அமைந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் இங்கு நடைபெறும் பிரம்மோற்சவ கருடசேவை உற்சவத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்வார்கள்.

தற்போது சில தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாளை (செப். 19) புரட்டாசி முதல் வாரம் கருடசேவை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க குழந்தைகள் மற்றும் 60 வயது கடந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக அதிகாலை 3.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை அரைமணி நேரத்திற்கு ஒரு முறை என 16 வகையான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால அட்டவணைகளில் தரிசனம் செய்ய விரும்புவோர் www.tnhrce.gov.in என்ற வெப்சைட்டில் தங்களுக்கான ஆன்லைன் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம்.

ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளதால் சமூக இடைவெளியுடன் விரைவாகவும், பாதுகாப்பாகவும் தரிசனம் செய்யலாம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்தால் மட்டுமே ஆன்லைன் வரிசை மற்றும் பொது தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: