திருச்சி: புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. 108 வைணவத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலாகும். இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகிறது. அதில் முக்கியமானது வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு ஆகும். இந்தாண்டு புரட்டாசி மாதம் நாளை (17ம்தேதி) பிறப்பதையொட்டி விரதம் இருந்து பெருமாளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கொரோனா பீதி நிலவுவதால் சமூக இடைவெளியை பின்பற்றவும், புரட்டாசி மாதத்தில் வரும் பக்தர்களின் நலம் பேணும் வகையில் தரிசனத்திற்கு காத்திருக்காமல் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் கட்டணமில்லா சேவை மற்றும் கட்டண சேவை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, www.srirangam.org என்ற இணையதள முகவரியில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.