காரைக்கால்: காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கு நீட் தேர்விற்காக மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து வழியிலேயே பழுதடைந்து நின்றதால் மாணவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் நீட் தேர்வானது இன்று நடைபெற உள்ளது. அதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் சுமார் 4842 மையங்களில் நீட் தேர்வானது நடைபெற உள்ளது. இந்த நிலையில், காரைக்காலில் தேர்வு மையம் இல்லை என்பதால், அந்த மாவட்டத்தை சேர்ந்த 250 மாணவர்கள் மற்றும் பெற்றோரை புதுச்சேரிக்கு அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.