மாத தவணைக்கு வட்டிக்கு வட்டி: உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை

புதுடெல்லி: வங்கி கடன் தவணையை சலுகையை பயன்படுத்திய மக்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்வது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கால் மக்கள் கடும் நிதி நெருக்கடியில் இருக்கின்றனர். இதனால், கடந்த மார்ச் மாதம் முதல் வங்களில் செலுத்தப்பட வேண்டிய கடன் தவணையை செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி 2 கட்டங்களாக, 6 மாதங்கள் கால அவகாசம் வழங்கியது. இது, கடந்த மாதம் 31ம் தேதியோடு நிறைவடைந்து விட்டது. இந்நிலையில், இந்த தவணை சலுகையை பயன்படுத்தியவர்களுக்கு வட்டிக்கு வட்டியை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வசூலிக்கின்றன. இதற்கு தடை விதிக்கக் கோரி, தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதை கடந்த முறை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘பேரிடர் சட்டத்தின் கீழ் மக்களுக்கு ஏன் வட்டி சலுகையை அளிக்கக் கூடாது?’ என எழுப்பியதோடு, ‘கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 6 மாத காலமாக கடனை திருப்பி செலுத்தாதவர்களின் கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது,’ என உத்தரவிட்டனர். விசாரணையை செப்டம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் பூஷன் தலைமிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதிக்குமா? அல்லது ஏதேனும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுமா? என்பது தெரிய வரும்.

Related Stories: