அரவக்குறிச்சி: அமராவதி அணை நிரம்பியதையடுத்து திறக்கப்பட்ட நீர் அரவக்குறிச்சி கொத்தப்பாளயம் தடுப்பணையை கடந்து கருர் நோக்கிச் செல்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரமும், 4047 மில்லியன் கன அடி மொத்த கொள்ளவும் கொண்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 87 அடி உயரம் உள்ளது. இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது.
இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 17 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அரவக்குறிச்சி வட்டத்தில் கொத்தப்பாளையம் சின்னதாராபுரம், ராஜபுரம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் அமராவதி பாசன விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தற்பொழுது வாழை, சூரியகாந்தி, மஞ்சள், பருத்தி, சோளம், கம்பு போன்ற பணப் பயிர்கள் பயிரிடுகின்றன்ர்.