காணொலி மூலம் இன்று நடக்கிறது புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க ஆளுநர்கள் மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் சிறப்புரை

புதுடெல்லி: ‘புதிய தேசிய கல்விக் கொள்கை - 2020’ பற்றி விவாதிக்க, மாநில ஆளுநர்களின் மாநாடு இன்று நடைபெறுகிறது. மத்திய கல்வித்துறை நடத்தும் இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி, பிரதமர் உரையாற்றுகின்றனர். தற்போது அமலில் இருக்கும் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, ‘புதிய தேசிய கல்விக் கொள்கை - 2020’-ஐ மத்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எனினும், கடந்த ஜூலை 29ம் தேதி, இந்த  கல்விக் கொள்கை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், புதிய கல்விக்கொள்கை பற்றி விவாதிக்க அனைத்து மாநில ஆளுநர்களின் மாநாடு இன்று நடைபெறுகிறது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்நிகழ்வில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். ‘உயர்கல்வியில் புதிய கல்விக்கொள்கை 2020ன் பங்கு’ என்ற தலைப்பில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் துறை மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொள்கின்றனர். அதே நேரம், இந்த கல்விக்கொள்கை பற்றி நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதம் நடத்தும் முன்பாக, ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Related Stories: