போதை பொருள் மாபியா கும்பலுடன் தொடர்பு; கன்னட நடிகை ராகிணி திவேதி கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை

பெங்களூரு: கர்நாடகாவில்  போதை பொருட்கள் விற்பனை செய்யும் மாபியா கும்பலுடன் தொடர்புள்ளதாக எழுந்த புகார் அடிப்படையில் கன்னட நடிகை ராகிணி திவேதியை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு மாநகரில் கடந்த வாரம் போதை பொருட்கள் கடத்திய புகாரில் அனிகா என்ற சீரியல் நடிகையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கன்னட திரையுலகில் உள்ள பல நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பலருக்கு  போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கூறியிருந்தார்.

இதனிடையில்  பத்திரிகையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு  மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்த புகாரில் 15 முன்னணி நடிகர்,  நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துவதாகவும் பலருக்கு போதை பொருள் விற்பனை  செய்யும் மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் கன்னட திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக இரு நாட்கள் இந்திரஜித் லங்கேஷிடம் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு  போலீசார் விசாரணை நடத்தியதை தொடர்ந்து புகார் தொடர்பாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பினர்.

இருவரும் நேற்று முன்தினம் விசாரணைக்கு  ஆஜராகவில்லை. ராகிணி வரும் திங்கட்கிழமை ஆஜராவதாகவும் சஞ்சனா தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் போலீசாருக்கு தெரிவித்திருந்தனர். நடிகை ராகிணி திவேதி கைது:-

இந்நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு பெங்களூரு எலகங்காவில் உள்ள நடிகை ராகிணி திவேதி வீட்டுக்கு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்று அவரை கைது செய்தனர். மேலும் வீட்டில் சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்தது. அதன் பின் பலத்த பாதுகாப்புடன் சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து வந்து காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விசாரணை நடத்தினர்.

போதை பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் உள்ளது தொடர்பாக ராகிணியிடம் 40 ேகள்விகளை போலீசார் எழுப்பினர். பெரும்பான்மையான கேள்விகளுக்கு தெரியாது என்று அவர் பதிலளித்தார். விசாரணையின்போது, சரியாக ஒத்துழைப்பு கொடுக்காமல் பல கேள்விகளுக்கு மழுப்பலான பதில் கொடுத்தாக தெரியவருகிறது. மாலை 6 மணி வரை நடத்திய விசாரணையில் போலீஸ் அதிகாரிகள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை. ஆகவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

அரைகுறை ஆடையில் வந்த நடிகையை தாக்க முயற்சி

தமிழில் வாட்ச்மேன், கோமாளி, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் பெங்களூரு அகரா பார்க் பகுதியில் நண்பர்கள் சிலருடன் அரை குறை ஆடையுடன் நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதை  பூங்காவில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் பார்த்து, அரைகுறை ஆடையில் ஏன் பொது இடத்தில் வலம் ஆட்டம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு நடிகை சம்யுக்தா ஹெக்டே மற்றும் அவரது தோழிகள் கேள்வி கேட்டவர்களுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை தாக்க முயன்றனர். பதிலுக்கு பொதுமக்களும் தாக்க முயன்றனர்.

இதையடுத்து நடைபயிற்சியாளர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று விசாரணை  நடத்தினர். அப்போது இரு தரப்பினரும் தங்கள் குற்றச்சாட்டுகளை முன்  வைத்தனர். இரு தரப்பினரையும் சமாதானம் செய்த போலீசார், நடிகை சமியுக்தாவை அங்கிருந்து அழைத்து சென்று, வீட்டில் விட்டனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்தது சஞ்சனா?

ராகிணி கைது செய்யப்பட்டுள்ளது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  சிசிபி போலீசாரிடம் இந்திரஜித் கொடுத்துள்ள 15 கலைஞர்கள் பட்டியலில் பெயர் உள்ளவர்களும் அச்சத்தில் உள்ளனர். இதே புகாரில் மற்றொரு நடிகையான சஞ்சனா  கல்ராணியின் நண்பரான ராகுலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி  வருகிறார்கள். அவர் கொடுத்துள்ள தகவல் அடிப்படையில் இரண்டொரு நாளில் சஞ்சனா கல்ராணியை போலீசார் கைது செய்யும் வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. போதை பொருள் மாபியா வழக்கு கர்நாடகாவில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால் பாலிவுட்டிலும் அச்சம் பரவியுள்ளது. சஞ்சனா கல்ராணி, நடிகை நிகில் கல்ராணியின் தங்கை என்பது குறிப்பிடதக்கது.

Related Stories: