மனித கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்கே, மாணவர்களின் பாகுபலியே... போஸ்டர்களால் முதல்வரை புகழ்ந்து தள்ளும் மாணவர்கள்!!

மதுரை : மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ,மாணவர்களின் மனித கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்கே, எனக் குறிப்பிட்டு மாணவ அமைப்பினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் இறுதித் தேர்வு தவிர மற்ற பருவத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.மேலும் படித்து முடித்து எத்தனை ஆண்டுகள் கழித்து இருந்தாலும் அரியர் வைத்திருந்து அந்த தேர்வுக்கு மாணவர்கள் கட்டணம் செலுத்தி இருந்தால் அந்த தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாவர். மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உயர்கல்வித்துறை அரசாணை வெளியிடும், எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கு மாணவர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருந்தது. சிலர் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் போஸ்டர்களை தயார் செய்து வெளியிட்டனர். இதனையடுத்து மாணவர்களின் மன உளைச்சலை போக்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதல்வர் விளக்கமளித்தார்.

இந்நிலையில் மதுரையில்,முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில், மாணவர்களின் மனித கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்கே, என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பினர் ஒட்டியுள்ளனர்.அந்தப் போஸ்டரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாணவர்கள் ஒன்றிணைந்து நன்றி செலுத்துவது போன்ற புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. இதே போன்று, திண்டுக்கல் நகர் முழுவதும் மாணவர்கள் சிலரின் புகைப்படங்களுடன் தமிழக முதல்வரை பாராட்டி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. போஸ்டரில், ‘‘மாணவர்களின் பாகுபலியே’, ‘அரியரை வென்ற அரசனே’ என்ற வாசகங்களுடன் முதல்வரின் படம் அச்சிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Related Stories: