உடன்குடி: குலசேகரன்பட்டினத்தில் மழை நீரை அகற்ற மர்ம நபர்கள் உடைத்தெறிந்த சாலை ஓராண்டாகியும் சீரமைக்கப்படாமல் இருப்பதால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையையொட்டி தசரா திருவிழா காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி சூரசம்காரத்தை காண்பதற்காக நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் சுமார் ரூ40லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டது. அந்தச்சாலையை திருவிழா காலங்கள் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் பொதுமக்கள், பக்தர்கள் கடற்கரைக்கு வந்து செல்ல பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. அப்போது கடற்கரை பகுதிக்கு சென்ற மர்ம நபர்கள் சிலர் அந்த சாலையை உடைத்து தேங்கி கிடந்த மழை நீரை கடலில் கலக்க விட்டனர்.