திருவனந்தபுரம்: பெங்களூருவில் சிக்கிய போதைப்பொருள் வியாபாரிகளுடன், தங்கம் கடத்தல் கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடத்திய அதிரடி சோதனையில், கன்னட டிவி நடிகை அனிகா, கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த முகமது அனூப் (39), பாலக்காட்டை சேர்ந்த ரவீந்திரன் (37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் கன்னட, மலையாள சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், முகமது அனூபுக்கும், திருவனந்தபுரம் தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரமீஸுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இது தவிர, கேரள முக்கிய அரசியல் பிரமுகரின் நெருங்கிய உறவினருடனும் முகமது அனூபுக்கு தொடர்பு இருந்துள்ளது.