ஈரோடு: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு நாளை (31ம் தேதி) ஈரோட்டில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் ஈரோடு மண்டல மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: 108 ஆம்புலன்சில் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு நாளை (31ம் தேதி) ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.ஓட்டுநர் பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்ற 25 முதல் 35 வயதுக்குட்பட்ட 162.5 செ.மீ.க்கு குறையாத உயரமுள்ள இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் உரிமம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். மாதம் ரூ.13,200 ஊதியம் வழங்கப்படும். மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம், ஏ.என்.எம், டி.பார்ம், டி.எம்.எல்.டி, பி.எஸ்.சி விலங்கியல், தாவரவியல், பயோகெமிஸ்டிரி, மைக்ரோ பயாலஜி, தாவர உயிரியல் படித்த 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.