நாகர்கோவில்: நாகர்கோவிலுக்குள் அணிவகுக்கும் டாரஸ் லாரிகளால் நெருக்கடியும், விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு பஸ்கள் இயக்கப்படாவிட்டாலும் கூட, நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடி குறைந்த பாடில்லை. மாநகரில் உள்ள அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருவதால், வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் உள்ளது. அரசு பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் இயங்காவிட்டாலும் கூட, மற்ற வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக பைக், கார்கள் அதிகளவில் நகருக்குள் வருகின்றன. இதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் நெருக்கடியால் திணறுகின்றன.ஏற்கனவே நெருக்கடியை குறைக்கும் வகையில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் லாரிகள் நகருக்குள் வர தடை உள்ளது. கொரோனா காலத்தில் பஸ்கள் இயங்காததால், இந்த உத்தரவை போக்குவரத்து போலீசார் செயல்படுத்துவதில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மணல், கற்களை ஏற்றிக்கொண்டு வரும் டாரஸ் லாரிகளின் வரத்து அதிகரித்துள்ளது.