சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் ஊர்காவல் படையினரை ஈடுபடுத்த வேண்டாம் என்று தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பழைய முறை போல மாதம் 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் நாள் ஒன்றுக்கு 560 ரூபாய் என்ற ஊதியம் அடிப்படையில், ஊர்காவல் படையினர் மாதம் 5 நாட்கள் வேலை செய்து வந்தனர். மார்ச் மாதம் முதல் கொரோனா பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டதால் மாதம் முழுவதும் வேலை கிடைத்தது. முன்பு மாதம் 2,000 ரூபாய் மட்டுமே ஊதியமாக பெற்று வந்தவர்கள், கொரோனா பணிகளால் மாதம் 16,800 ரூபாய் ஊதியம் பெற்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஊர்காவல் படையினரை ஈடுபடுத்த வேண்டாம் என்று தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.