ஆந்திர மாநில எல்லையில் லாரி ஓட்டுனரை தாக்கி ரூ.12 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை: போலீஸ் வலைவீச்சு

சித்தூர்:  ஆந்திராவில் கண்டெய்னர் லாரியில் கொண்டுசெல்லப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்பத்தூரிலிருந்து நேற்று மாலை தனியார் நிறுவனத்தை சேர்ந்த செல்போன்கள், கண்டெய்னர் லாரியில் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து லாரியானது ஆந்திர மாநில எல்லையில் பயணித்து கொண்டிருந்தபோது, சில மர்ம நபர்கள் மற்றொரு லாரியில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பிறகு, செல்போன் ஏற்றி சென்ற லாரியை முந்திச்சென்ற மர்ம நபர்கள் திடீரென லாரியை வழிமறித்துள்ளனர்.

பின்னர் மர்ம நபர்கள், லாரி டிரைவரிடம் சென்று போலி முகவரியை காண்பித்து எவ்வாறு செல்போன்களை எடுத்து செல்கிறீர்கள்? , யார் உங்களுக்கு அனுமதி அளித்தது? என வினவியுள்ளனர். அதற்கிடையில் மற்றொரு மர்ம நபர் லாரி டிரைவரை துப்பாக்கி முனையில் மடக்கி, அடித்து உதைத்து அவர்களை கண்டெய்னர் லாரியிலிருந்து இறக்கிவிட்டதோடு மட்டுமல்லாமல், செல்போன்கள் ஏற்றி வந்த லாரியை கடத்தி சென்றுள்ளனர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த செயல் லாரி டிரைவருக்கு புரிவதற்குள் மர்ம நபர்கள் 12 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதன் பின்னர், லாரி டிரைவர் நகரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. பின்னர் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, லாரியில் வைக்கப்பட்டிருந்த 12 கோடி ரூபாய் மதிப்பிலான ரெட்மி செல்போன்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நகரி போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: