8 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்டுக்கு கொரோனா தொற்று உறுதி!!

ஜமைக்கா : 8 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 21-ம் தேதி உசேன் போல்ட் தனது 34-வது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடினார். உசேன் போல்ட் குடும்பத்தினர், நண்பர்கள் மான்செஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் ரஹீம் ஸ்டெர்லிங், பேயர் லெவர்குஷன் விங்கர் லியான் பெய்லி, கிரிக்கெட் வீரர் கிறிஸ்கெயில் உள்ளிட்டோர் இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அதில் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பலரும் முகக்கவசம் அணியாமல் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், தடகள வீரர் உசேன் போல்ட்டுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. இதையடுத்து, உசேன் போல்ட் தனது ட்விட்டரில் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “எனக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பலரும் கூறுகிறார்கள். அதற்காகவே நான் சனிக்கிழமை கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அந்த முடிவுக்காகக் காத்திருக்கிறேன். அதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை முடிவில் உசைன் போல்ட்டுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: