வலங்கைமான் அருகே வயலில் அறுந்து கிடக்கும் மின் கம்பியால் விபத்து அபாயம்

வலங்கைமான்: வலங்கைமான் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அறுந்து கிடக்கும் மின்கம்பியை சரிசெய்ய பொதுமக்கள் மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் குட்டைக்குளம் பகுதியில் உள்ள மின்மாற்றியிலிருந்து சந்திரசேகரபுரம் பூண்டிப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கான மின் மோட்டார்களுக்கு மின்வழித்தடம் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒருமாதத்திற்கு முன் மின்கம்பி அறுந்து வயல்வெளிப்பகுதியில் விழுந்தது. இச்சம்பவம் குறித்து வலங்கைமான் மின்வாரியத்திற்கு பொதுமக்கள் கொடுத்த தகவலினை அடுத்து மின் இணைப்பினை மின்சாரவாரியத்தினர் உடனடியாக துண்டித்தனர். அதனையடுத்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் மின்கம்பி அறுந்து விழுந்து ஒரு மாதத்தை கடந்த நிலையில் அதனை சரி செய்ய மின்வாரியத்தினர் முன்வரவில்லை. தற்போது விவசாய பணிகள் துவங்கி உள்ள நிலையில் மின்கம்பி அறுந்து கிடக்கும் இடத்தில் உழவு பணியினை மேற்கொள்ன முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். அப்பகுதியில் பல்வேறு பயன்பாட்டிற்காக செல்லும் பொதுமக்கள் மின்கம்பி அருகே அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே மேலும் காலதாமதம் செய்யாமல் அறுந்து கிடக்கும் மின்கம்பியை சரிசெய்ய பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: