கர்நாடகாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கலகத்தால் 50 பேர் கைது: தப்பியோடிய ஆண்களால் வெறிச்சோடியது கிராமம்

பெங்களூரு: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 29 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், வழிப்பாட்டுத் தலங்கள் பெரும் கட்டுப்பாடுகளுடன் சில இடங்களில் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் கோபால் மாவட்டத்தில், குஸ்திகி தாலுகாவின் டோட்டிஹால் கிராமத்தில் உள்ள கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கலகத்தின் காரணமாக ஐம்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டோட்டிஹால் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பூஜைக்கு தாசில்தார் அனுமதி அளித்துள்ளதாகவும், இதன் காரணமாக அதிக அளவில் கூட்டம் கூடியுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கொரோனா நெருக்கடி காரணமாக பூஜை கோயிலுக்குள் நடத்தப்பட்டது. மேலும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் இதில் ஈடுபட்டனர். ஆனால் சிறிது நேரத்திற்குப் பின்னர் மக்கள் கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அதிகமான மக்கள் நுழைவதைத் தடுக்க கோயில் கதவுகள் மூடப்பட்டன. இருப்பினும் வெளியில் இருந்தவர்கள் ஆவேசமடைந்து கோயில் கேட்டினை திறந்து தேரை வெளியே இழுக்க முயன்றுள்ளனர்.

இதன் காரணமாக காவல்துறையினர் லேசான தடியடியை நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். பின்னர் தேரை மீண்டும் கோயிலுக்குள் இழுத்துச் சென்று கதவுகளை அடைத்துள்ளனர். சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை கைது நடவடிக்கையை காவல்துறை தொடங்கியுள்ளது. காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பயந்து கிராமத்தினர் பலர் வெளியேறியுள்ளனர். இதனால் கிராமம் வெறிச்சோடியுள்ளது. தப்பி ஓடிய ஆண்களால் வயதானவர்களும் பெண்களும் மட்டுமே கிராமத்தில் மீதமிருக்கின்றனர். ஆண்கள் வீடு திரும்பும் வரை காவல்துறை காத்திருக்கும் என்றும் எஸ்.பி தெரிவித்துள்ளார்.

Related Stories: