சொத்தை அபகரிக்க அண்ணன் படுபாதகம்: ஐஸ்கிரீமில் தங்கைக்கு விஷம் கொடுத்து கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம் வெள்ளறிகுண்டு பகுதியை சேர்ந்தவர் பென்னி (48). அவருக்கு நாலரை ஏக்கர் நிலம்,பன்றி பண்ணைவைத்துள்ளார். இவரது மனைவி பெஸ்ஸி (46). தம்பதியின் மகன் ஆல்பின் (22). கம்பத்தில் வேலை செய்தார். ஊரடங்கால் வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார். மகள் ஆன்மேரி (16). 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 1ம் தேதி ஆன்மேரி, பென்னிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால்,  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 5ம் தேதி ஆன்மேரி இறந்தார். பிரேத பரிசோதனையில், அவரது ரத்தத்தில் எலி விஷம் கலந்திருந்தது தெரிந்தது. விசாரணையில், அவர்கள் வீட்டில் ஐஸ்கிரீம் சாப்பிட்டது தெரிந்தது. மீதமிருந்த ஐஸ்கிரீமை பரிசோதித்ததில், அதில் எலி விஷம் கலந்திருந்தது.

இந்நிலையில், ஆல்பினும் வயிற்று வலி என மருத்துவமனையில் சேர்ந்தார். அவருக்கு பிரச்னை இல்லை என டாக்டர்கள் கூறியதால், போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில், சொத்தை அபகரிக்க ஐஸ்கிரீமில் எலி விஷம் கலந்து கொடுத்ததாக கூறினார். ஒரு வாரத்துக்கு முன்பு சிக்கன் குழம்பிலும் விஷம் கலந்துள்ளார். ஆனால், குடும்பத்தினருக்கு லேசான வயிற்று வலியுடன் சரியாகி விட்டது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பென்னி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.

Related Stories: