கடன் தவணை வசூலிக்க தடை கோரி வழக்கு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நோட்டீஸ்: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: கடன் தவணைகளை வசூலிக்க இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில், ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொரோனா ஊரடங்கால் தொழில்கள் முடங்கியுள்ளன. பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் வருமானமின்றி இருக்கின்றனர். இதன் காரணமாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களுக்கு மார்ச் முதல் மே வரை தவணைகளை செலுத்த தேவையில்லை என கடந்த மார்ச் 27ம் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. தற்போது, ஆகஸ்ட் வரை தவணை செலுத்த தேவையில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆனால் சில நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் உத்தரவை அமல்படுத்த முடியாது என நேரடியாகவே சொல்கின்றன. கடன் தவணை சலுகை கோரி அனுப்பும் விண்ணப்பங்களை பல நிறுவனங்கள் பரிசீலிக்காமல் அப்படியே வைத்துள்ளன. சில நிதி நிறுவனங்கள் கடன் தவணை சலுகை கேட்டு விண்ணப்பிப்பதற்கு தனிக்கட்டணம் வசூலிக்கின்றன. தவணை செலுத்த தவறியதால் பல நிதி நிறுவனங்கள், கடன் பெற்று வாங்கிய இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றன. இதனால் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ரிசர்வ் வங்கிக்கு கட்டுப்பட்டவை. ரிசர்வ் வங்கியின் உத்தரவை வங்கிகள், நிதி நிறுவனங்கள் மறுப்பு தெரிவிக்காமல் அமல்படுத்த வேண்டும். தவறும் நிதி நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கி குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம்.

எனவே, கடனுக்கான தவணை செலுத்த கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி  பிறப்பித்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்தவும், உத்தரவை மீறி கடன் தவணையை வசூலித்த வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். அதுவரை ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி கடன்களுக்கான தவணையை வசூலிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்ய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories: