ஜெய்ப்பூர்: எம்எல்ஏக்கள் மனக்குமுறல் அடைவது இயல்புதான் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் அம்மாநில ஆட்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோரை திங்கட்கிழமை நேரில் சந்தித்து பேசினார் சச்சின் பைலட். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்ற நிலையில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டிற்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில், ஜெய்ப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், எம்எல்ஏக்கள் மனக்குமுறல் அடைவது இயல்புதான். பல வாரங்களாக ரிசார்ட்டில் தங்கும் நிலைமைக்கு அவர்கள் வந்துள்ளார்கள், என கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், இப்போது நிலைமை சீரடைந்து உள்ளது. எனவே அவர்களை சந்தித்து நான் விளக்கம் கொடுத்துள்ளேன்.