கொரோனா நோய்க்கு உடனடி தீர்வு தற்போதைக்கு இல்லை.. தடுப்பு மருந்தே கண்டுபிடிக்கப்படாமலும் போகலாம் : பீதியை கிளப்பிய உலக சுகாதார நிறுவனம்!!!

ஜெனீவா : கொரோனா வைரஸிற்கு உடனடி தீர்வு என்ற ஒன்று தற்போதைக்கு இல்லை என்றும் ஒரு சில சமயங்களில் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படாமலும் போகலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது தீவிரம் அடைந்து உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்கா,ரஷ்யா,இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் கொரோனா தாக்கத்தால் நிலைகுலைந்து போகியுள்ளன. மேலும் உலக சுகாதார அமைப்பு கூறும் ஒவ்வொரு அறிவிப்புகளையும், புள்ளி விவரங்களையும், தகவல்களையும் உலக மக்கள் அனைவரும் உற்றுநோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெனீவாவில் நடந்த ஆன்லைன் செய்தியாளர் கூட்டத்தில் WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவர் கூறியதாவது, கொரோனா நோயை குணப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட பல தடுப்பூசிகள் இப்போது 2ம் மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன. மேலும் தொற்றுநோயைத் தடுக்க உதவும் பல பயனுள்ள தடுப்பூசிகளைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பர் என்பதை நாங்கள் அனைவரும் நம்புகிறோம். இருப்பினும், இப்போதைக்கு 100 சதவீதம் வெற்றிகரமாக குணப்படுத்த்க்கூடிய மருந்து கிடைக்க வாய்ப்பு இல்லை. இந்த மருந்துகளும் தடுப்பூசிகளை மட்டும் தீர்வாகாது. ஒரு சில நேரங்களில் இந்த தடுப்பூசிகள் செயல்படாமலும் போகலாம். எனவே கொரோனா  சோதனை எண்ணிக்கையை அதிகரித்தல் , நோயாளியுடன் தொடர்புடையவர்களை கண்டறிதல், சமூக இடைவேளை மற்றும் முககவசம் அணிவது போன்ற அறியப்பட்ட அடிப்படைகளை தொடர்ந்து பின்பற்றுவதே கொரோனாவுக்கான சிறந்த தீர்வாகும், என்றார்.

Related Stories: