கும்மிடிப்பூண்டி அருகே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் டாக்டர் பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து  தடுப்பு சுவரில் மோதியதில்  டாக்டர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ஆல்பா என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகின்றது. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரகாஷ் (39) அவர் வழக்கம்போல மருத்துவமனைக்கு சென்று விட்டு நண்பர்களுடன் நேற்றுமுன்தினம் மாலை சென்னைக்கு சென்றபோது புதுவாயில் அருகே டயர் திடீரென வெடித்தது. இதில் நிலைதடுமாறிய கார் பக்கவாட்டு சுவரில் மோதி 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை அறிந்த கவரைப்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் விரைந்து 4 பேரை மீட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணி அளவில் சிகிச்சை பலனின்றி டாக்டர் பிரகாஷ் உயிரிழந்தார். இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: