ஐதராபாத்: கொரோனா வைரஸை மாய, மந்திரத்தால் குணப்படுத்துவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கொரோனா பாபாவை ஐதராபாத் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் இஸ்மாயில் பாபா என்பவர் மாய, மந்திரங்கள் மூலம் கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி ஒரு நோயாளிக்கு 40 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்திருக்கிறார். காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு மந்திரங்கள் செய்து, எலுமிச்சைப்பழம் மற்றும் விபூதி வழங்கி அப்பாவி மக்களை நம்ப வைத்து அவர் ஏமாற்றி வந்திருக்கிறார். மேலும் இந்த மருந்து தாயத்துகளை உபயோகிப்பதன் மூலம் கொரோனா அருகிலேயே வராது என்றும் அவர் உரைத்துள்ளார். கொரோனா தொற்றுக்காக முகக்கவசம் அணிய வேண்டாம் என்று அவரது ஆதரவாளர்கள் பிரச்சரம் வேறு செய்து வந்தனர்.