செம்பனார்கோவிலில் இடவசதி இல்லாததால் பருத்தி கொள்முதல் நிலையம் திடீர் இடமாற்றம்: விவசாயிகள் அலைக்கழிப்பு

தரங்கம்பாடி: செம்பனார்கோவிலில் உள்ள பருத்தி கொள்முதல் செய்யும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இடவசதி இல்லாததால் ஆக்கூரில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு மாற்றப்பட்டது. இதனால் பருத்தி மூட்டை ஏற்றிவந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள பருத்தி கொள்முதல் நிலையத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை (நாளை) பருத்தி கொள்முதல் நடைபெறும். இதற்காக விவசாயிகள் தங்களது பருத்தியை விற்பனை செய்ய நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆக்கூருக்கு எடுத்து வந்தனர்.

இதில் ஆக்கூர் அரசு சேமிப்பு கிடங்கிலும் போதுமான இடம் இல்லாததால் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியுடன் வாகனங்களை ஆக்கூரில் இருந்து மடப்புரம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை ரோட்டில் நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவத்துக்கு இடையூறு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கபட்டனர். ஒழுங்குமுறை விற்பனைகூட அலுவலர்கள் இடம்மாற்றி விவசாயிகளை அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பருத்தி வாகனங்கள் வந்ததால் ஆக்கூர் திக்குமுக்காடி போனது. செம்பனார்கோவில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

Related Stories: