பலாத்காரம் செய்த மாணவியை திருமணம் செய்து கொள்ள தயார்: கேரள உயர் நீதிமன்றத்தில் பாதிரியார் திடீர் மனு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கண்ணூர் அருகே உள்ள கொட்டியூர் செயின்ட் செபாஸ்டின் சர்ச் பாதிரியாராக இருந்தவர் ராபின். இந்த சர்ச்சின் கட்டுப்பாட்டில் நடத்தப்படும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவியை சில ஆண்டுகளுக்கு முன் ராபின் பலாத்காரம் செய்தார். இதனால், மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றார். ஆனால், சிறுமியின் தந்தைதான் பலாத்காரம் செய்ததாக கூறி தப்ப முயன்ற ராபினை, பின்னர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து இவர் கேரள உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் நேற்று அவர் தாக்கல் செய்த புதிய மனுவில், ‘பலாத்காரம் செய்த மாணவியை திருமணம் செய்ய விரும்புகிறேன். இதற்காக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Related Stories: