இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை எப்போது?: இன்று அறிவிப்பு வெளியாகிறது

சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்பதற்கான அறிவிப்பை உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று  மாலை வெளியிடுகிறார். தமிழகத்தில் அண்ணா பல்கலை மற்றும் அதனுடன் இணைந்த 536 பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதற்கான கவுன்சலிங் ஜூலை மாதம் நடக்கும். ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாலும், பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகாத நிலையிலும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கையை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தான் பொறியியல் கவுன்சலிங்கை நடத்த உள்ளது. அதற்கான பணிகள் நடக்கிறது. இந்தநிலையில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு, ஆன்லைன் மூலமே கவுன்சலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று மாலை 4 மணிக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட உள்ளார்.

Related Stories: