திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கில் தேவையின்றி சுற்றி திரிந்தவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பிட்ட கால இடைவெளியில் அவை, அதன் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல காவல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டுள்ள எஸ்ஐக்கள், இடைத்தரகர்கள் சிலரை வைத்து, பேரம் பேசி வாகனங்களை காவல் நிலையங்களில் இருந்து எடுத்து தருவதாக எஸ்.பி அரவிந்தனுக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து எஸ்.பி அரவிந்தன் கூறுகையில், போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனத்திற்கு, உங்கள் செல்போனுக்கு குறுந்தகவல் வரும். அப்போது வந்து வாகனத்தைப் பெற்று கொள்ளலாம். அதற்கு எவ்வித சிபாரிசும் தேவையில்லை. யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். வாகனங்களை விடுவிக்க, எவ்வித அபராதத் தொகையும் வசூலிக்கப்படவில்லை என்றார்.