மணப்பாறை காவல் நிலையம் முன்பு நீதிகேட்டு தர்ணாவில் ஈடுபட்ட கர்ப்பிணி சிறுமி தற்கொலை

மணப்பாறை: மணப்பாறை காவல் நிலையம் முன்பு நீதிகேட்டு தர்ணாவில் ஈடுபட்ட 5 மாத கர்ப்பிணி சிறுமி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கவரப்பட்டியை சேர்ந்த விவசாயியின் 17 வயது மகள் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரது உறவுக்காரரான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த பகவான்பட்டியை சேர்ந்த ராம்கி (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தனிமையில் சந்தித்து வந்ததால் சிறுமி கர்ப்பமானார்.

இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி கூறியுள்ளார். அதற்கு, ராம்கி நீ  5 மாத கர்ப்பிணியாக இருப்பதால் திருமணம் செய்ய முடியாது என்று கூறி சிறுமியையும், அவரது குடும்பத்தையும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த மே 29ம்தேதி மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ராம்கியை தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் மணப்பாறை மகளிர் காவல் நிலையம் முன்பு சிறுமியும், அவரது தாயாரும் தர்ணாவில் ஈடுபட்டனர். மகளிர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். எனினும் மன உளைச்சலில் இருந்த சிறுமி, வயலுக்கு தெளிக்கும் மருந்தை குடித்து நேற்று மதிய தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமன், சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, எஸ்.பி ஜியாஉல்ஹக் ஆகியோர் மணப்பாறை காவல் நிலையத்தில் முகாமிட்டனர். மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட ராம்கியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

* கடும் நடவடிக்கை ஐ.ஜி. ஜெயராமன் பேட்டி

ஐ.ஜி. ஜெயராமன் அளித்த பேட்டியில், ‘ராம்கி முன்ஜாமீன் பெற்ற விவகாரம் அறிந்து சிறுமி மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: