கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அதிமுக எம்எல்ஏ: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

குன்றத்தூர்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி, பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். அவருக்கு ஆரத்தி எடுத்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். போரூர் அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்தவர் பழனி (61). ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ. கொரோனா பேரிடர் காலங்களில், எம்எல்ஏ பழனி, குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

இதையொட்டி, கடந்த மாதம் 12ம் தேதி அவருக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, கடந்த 26 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, கொரோனா தொற்று முழுமையாக அவருக்கு குணமடைந்தது. இதையடுத்து அவர் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி நேற்று வீடு திரும்பினார். அவருக்கு ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், பூங்கொத்து கொடுத்து, ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.

Related Stories: