இன்று முழு முடக்கத்தால் முன்னெச்சரிக்கை..: ரூ.171.20 கோடிக்கு நேற்றே மதுபானங்களை வாங்கி குவித்த தமிழக குடிமகன்கள்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை  கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக கடந்த ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. ஆனாலும், ஊரடங்கை முறையாக கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதன் விளைவாகவும், அரசின் தவறான நடவடிக்கைகளாலும்  தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, 6வது கட்டமாக கடந்த ஜூலை 1ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக  அரசு அறிவித்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று பால், மருந்து கடைகள், பத்திரிகைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. தேவையில்லாமல் வெளியே  சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என்ற காரணத்தால், மது விற்பனையானது நேற்று ஜோராக நடைபெற்றுள்ளது. இதனால், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.171.20 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.40.5 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.38.3 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.37.4 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோவை மண்டத்தில் ரூ.34.8 கோடி, சென்னையை சுற்றியுள்ள பகுதிகாலில் ரூ.20.2 கோடி, திருச்சியில் ரூ.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: