திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே புதிதாக திறக்கப்பட்ட சுற்றுலா விடுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி காபரே டான்சுடன் மது விருந்து நடந்தது. இதில் நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் உட்பட 300க்கு மேற்பட்டோர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் சாந்தன்பாறை அருகே உள்ள ராஜாப்பாறையில் ஒரு பிரபல நிறுவனம் சார்பில் சுற்றுலா விடுதி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த மாதம் 28ம் தேதி நடந்தது. இந்த விழாவில் அப்பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள். போலீஸ் அதிகாரிகள் உட்பட 300க்கு ேமற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். அங்கு காபரே டான்ஸ், பெல்லி நடனம் மற்றும் மது விருந்தும் நடந்துள்ளது. இரவு 8 மணிக்கு தொடங்கிய கேளிக்கை நிகழ்ச்சி நள்ளிரவு 2 மணி வரை நடந்தது.