திருமலை: திருப்பதி தேவஸ்தானத்தில் பணியுரியும் 17 பேருக்கு கொரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால், அனைத்து ஊழியர்களுக்கும் மீண்டும் பரிசோதனை செய்ய அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருமலை அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் காணொளி காட்சி மூலம் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, அவர் பேசியதாவது: கடந்த 8ம் தேதி முதல் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் 12 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படுகிறது.