பாட்னா: திருமண விழாவில் கலந்துகொண்ட 111 பேருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா நகரை அடுத்த பாலிகஞ்ச் என்ற ஊரை சேர்ந்த மென்பொருள் நிபுணருக்கு ஜூன் 15ம் தேதி திருமணம் நடைபெற்றது. மனம்முடித்த 2 நாட்களில் புது மாப்பிள்ளை திடீரென மரணமடைந்துள்ளார். கொரோனா பரிசோதனை நடத்தப்படாமலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மணமகனின் உறவினர்கள் அடுத்தடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டதால் எடுக்கப்பட்ட வைரஸ் பரிசோதனையில் இதுவரை 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமல் மணமகன் உடல் எரியூட்டப்பட்டு விட்டதால் அவருக்கு வைரஸ் தொற்று இருந்ததா என்பதை கண்டறிய முடியவில்லை. பாட்னா திருமண விழாவில் பங்கேற்று இருந்த மேலும் 80 பேரை சுகாதார அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.